கவிதை கேட்டால்
கவிதையும் கொடுக்கும்...
அலை பாயும்
அத்தனையும் ஆசைப்படும்
ஆசைப்பட்டது கிடைக்கவில்லையெனில்
அவஸ்தைப்படும்
அழும் ஆர்ப்பாட்டம் செய்யும்
புகழ்ந்தால் புல்லரிக்கும்
சபாஷ் என்று சத்தமிடாமல் தட்டிக்கொள்ளும்
பரிகசித்தால் பயந்து போகும்
கோபப்படும்
குய்யோ முய்யோ என்று கத்தும்
கற்பனை செய்வதை நிஜமென்று நம்பும்
காணும் போது கனவையும் நம்பும்
மரண பயத்தில் மிரளும்
பாதுகாப்பின்மையில் பரிதவிக்கும்
ஆதரவுக்கு ஏங்கும்
அடைக்கலம் தேடும்
அடைக்கலம் தருபவையிடம் அடிமையாகி போகும்
இருப்பது போதும் என்று
ஒருபோதும் நினைக்காது
இன்னொன்று கேட்கும்
இன்னொன்று கிடைத்தால் இலவசமாய் கேட்கும்
திருடவும் செய்யும்
இரக்கப்படும்
நேர்மையை விரும்பும்
உதவி செய்யும்
காதல் வயப்படும்
சுயநலம் முளைக்கும்
சுயநலத்தில் இருந்தே சகலமும் முளைக்கும்
புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளும்
தத்துவ தர்க்கங்கள் செய்யும்
கருத்துக்களை வாரி வழங்கும்
ரகசியங்கள் நிரப்பிக் கொள்ளும்
ஒளிந்து கொள்ளும்
உள்ளத்தில் இருப்பதை ஒளித்தும் கொள்ளும்
உள்ளுக்கும் வெளியிற்க்கும் சுவர்கள் எழுப்பும்
நினைவுக் குப்பைகளை சேமித்துக் கொள்ளும்
குப்பைமேட்டில் அமர்ந்து கொண்டு
வாசனை திரவியங்கள் அடித்துக் கொள்ளும்
தனக்கு தானே கட்டளைகள் போட்டுக் கொள்ளும்
கட்டுப்பட்டு இருப்பதை
கௌரவமாக நினைக்கும்
பழையதை லேசில் விடாது
கடந்த காலத்திலேயே வாழும்
தேங்கி தேங்கி பாசி படியும்
மேலானவை - கீழானவை -
பிரித்துக் கொள்ளும்
சிலரிடம் சிரிக்கும்
சிலரை வஞ்சிக்கும்
சிலரை விரும்பும்
சிலரை வெறுக்கும்
ஒப்பிட்டுப் பார்த்து வெதும்பிச் சாகும்
பெண்களை மோகம் கொள்ளும்
ஒருவனுக்கு ஒருத்தி என்று சத்தியமாய் நினைக்காது
இன்ன பிற இன்ன பிற இன்ன பிற என
பித்துப் பிடித்து
பித்துப் பிடித்ததையும் அறியாத பித்தாய்
அறிவு வேஷம் கட்டி
ஆடும் வரை ஆடி
அழிந்தே போகும் அறிவீலி மனமே!
என்று -
என்னைப் பார்த்து நானே வசைமொழிய
கவிதை கேட்டால்
கவிதையும் கொடுக்கும்...